ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அந்நாட்டு அரசு தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது குறித்து பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாத காரணத்தினாலும் அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. வனப்பகுதிகளில் தொடர் தீ விபத்து ஏற்படுகிறது.
மேலும், குடிநீர் பற்றாக்குறை காரணமாக அங்கு பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிட்னி நகருக்கு மேற்கே ஒரு குக்கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ் என்ற இடத்தில் ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதனை போலீஸார் கண்டறிந்துளளனர். எப்போது நடந்தது என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தண்ணீர் லாரிகள் வந்தால் கூட போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், 'நியூ சவுத் வேல்ஸின் பகுதிகளில் நீடித்த வறட்சி நிலவி வருகிறது. நீர் பற்றாக்குறைதான் சிலரை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட வைக்கும். மேலும் சமீபத்திய பருவநிலை மாற்ற நிகழ்வுகளும் வறட்சிக்கு காரணம்' என்று தெரிவித்துள்ளார்.