இலங்கை சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் 72வது சுதந்திர தினம் வருகிற 2020 பிப்ரவரி 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அங்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் சுதந்திர தினவிழாவில் சிங்கள மொழியில் மட்டுமில்லாது தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது என்றும் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் எவ்வாறு ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறதோ அதுபோன்று இலங்கையிலும் இனி ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படும் என அந்நாட்டு அமைச்சர் பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
2020 இலங்கை சுதந்திர தின விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.