

சியோல்: பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனிதன் முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்று தென்கொரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், இவ்விரு பிரச்னைகளுக்குமே மகாத்மா காந்தி கூறியிருக்கும் தத்துவங்கள் நமக்கு வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.
இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்கு, இரண்டுநாள் பயணமாக தென்கொரியா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, யோன்சேய் பல்கலையில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் உருவச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் தென்கொரியா அதிபர் மூன் ஜே -இன் மற்றும் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் பான் கி-மூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மோடி, மகாத்மா காந்தி உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். தற்போது உலகை அச்சுறுத்தும் இரண்டு விஷயங்களாக பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் விளங்குகிறது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையை நாம் பார்த்தோமேயானால், இவ்விரு பிரச்னைகளுக்குமே தீர்வு கண்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு பதிலாக, அமைதி, சகோதரத்துவம், அகிம்சையை வலியுறுத்தி வந்த காந்தி, இயற்கை வளம் குறித்து சொல்லியிருப்பது என்னவென்றால், கடவுளும், இயற்கையும் மனிதனுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளது. அதனை நாம் பேராசையோடு அடைய முற்படும்போது, முற்றிலும் அழிந்து போகும், நமது தேவைக்கானதாக வாழ்க்கை மாற வேண்டுமே தவிர, பேராசைக்காக வாழக் கூடாது என்று மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.