பெய்ஜிங்: சீனாவில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் ராணுவப் படைகளிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. சீன ராணுவத்தில் சுமார் 20 லட்சம் தரைப்படை வீரர்கள் உள்ளனர்.
தற்போது சீன ராணுவத்தை நவீன மயமாக்குவது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
அதேசமயம் நாட்டின் வடமேற்கு எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றை விரிவுபடுத்த நவீன வசதிகளைச் சேர்க்கும் திட்டமும் சீனாவிடம் உள்ளது.
அத்துடன் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவு போன்றவைகளும் நவீனப்படுத்தப்பட உள்ளது என்று சீன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.