பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய காரணத்திற்காக 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன சுங்கத்துறை அதிகாரிகள் அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக அருணாசல பிரதேசம் உள்ளது. ஆனால் இதனை தங்களது ஆதிக்கத்தின் கீழ் உள்ள தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதுதொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்க அருணாசல பிரதேசத்திற்கு செல்லும் இந்திய தலைவர்களுக்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல் அங்கு செல்லும் சீன மக்களுக்கு என்று தனியாக விசா வழங்காமல் இணைக்கப்பட்ட விசா தாள்களை வழங்கி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் அதேசமயம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம் அருணாசல பிரதேசம் என்பதால், நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதுபோல் அருணாசல பிரதேசத்திற்கும் இந்திய தலைவர்கள் சென்று வருகின்றனர் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக இரு நாடுகளும் இதுவரை 21 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அதே நேரம் தைவான் தீவையும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா உரிமை கோரி வருகிறது.
இந்நிலையில் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன சுங்கத்துறை அதிகாரிகள் அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தைவான் தீவினை தனி நாடாகவும் மற்றும் சீனாவின் ஒரு பகுதியாக அருணாசல பிரதேசத்தினை குறிப்பிடாத சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன சுங்க துறை அதிகாரிகள் அழித்துள்ளனர்.
இந்த வரைபடங்கள் அனைத்தும் பெயர் தெரிவிக்கப்படாத நாடு ஒன்றிற்கு ஏற்றுமதியாக இருந்தது என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.