சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கவும், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவும் அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்க அரசால் ஒரு போலி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணித்தது. அதன்படி, இந்தப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த 161 மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும், 90 மாணவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுவரை 250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 80% பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டதாகவும், எஞ்சிய மாணவர்கள் விரைவில் நாடு கடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் போலியானது என்று ஏற்கனவே மாணவர்களுக்குத் தெரியும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.