சீனாவில் பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஜியாங்சு மாகாணத்தில் 69 பேருடன் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த பேருந்து, 3 பேருடன் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், 36 பேர் உயிரிழந்தனர்; மேலும் 36 பேர் காயமடைந்தனர். பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் இந்த விபத்து குறித்து கூடுதல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஏராளமான பேருந்துகள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து மரணங்கள நேரிடுகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் அந்த நாட்டு சாலை விபத்துகளில் 58,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.