ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக கடந்த 17 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டம், ஞாயிற்றுக்கிழமை தீவிரமடைந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை விசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
ஒரு சில போராட்டக்காரர்கள், சீன மக்கள் குடியரசின் 70-ஆவது ஆண்டு விழாவை வரவேற்கும் பதாகைகளை கிழித்தெறிந்து, தற்காலிக தடுப்புகளுக்கு தீவைத்தனர். இதற்கிடையே, ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகளிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.