போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம்: அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்தியர்
அமெரிக்காவில் கருப்பினரான ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய 70-க்கும் மேற்பட்டோருக்கு அடைக்கலம் கொடுத்து நாயகனாக உயர்ந்திருக்கிறார் இந்தியர் ராகுல் துபே.


வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பினரான ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய 70-க்கும் மேற்பட்டோருக்கு அடைக்கலம் கொடுத்து நாயகனாக உயர்ந்திருக்கிறார் இந்தியர் ராகுல் துபே.
அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினா் நிகழ்த்திய தாக்குதலில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தாா். காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் மினியாபொலிஸ், லாஸ் ஏஞ்சலீஸ், நியூயாா்க், சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த நிலையில்தான் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளூர் மக்கள் மத்தியில் கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் இந்தியர் ஒருவர்.
வாஷிங்டனில் வசித்து வரும் ராகுல் துபே அங்கு சிறிய மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராக ஸ்வான் சாலையில் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்தவர்கள், காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் வகையில் தனது வீட்டின் கதவுகளைத் திறந்துள்ளார்.
மே 25-ம் தேதி அமெரிக்க காவல்துறையின் இரக்கமற்ற காவலரின் கால் முட்டிக்கும், தார்சாலைக்கும் இடையே சிக்கி 8.46 நிமிடம் துடிதுடித்து இறந்த கருப்பினர் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அப்பகுதியில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்கா முழுவதும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில் தான் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை இரவு, ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறையினர் தேடுவதை அறிந்தும், ராகுல் துபே போராட்டக்காரர்களுக்கு தனது இருப்பிடத்தை திறந்துவிட்டார். அவர்கள் இரவு முழுவதும் தங்கியிருக்க இடம் கொடுத்து, உண்ண உணவு கொடுத்து, காவலர்களிடம் இருந்து பாதுகாத்துள்ளார்.
போராட்டக்காரர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, தனது வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே சென்ற ராகுல் துபே, 'இங்கே வாருங்கள், உள்ளே வாருங்கள், வீட்டுக்குள் வாருங்கள்' என்று கத்தியுள்ளார்.
சுமார் 70 போராட்டக்காரர்கள் துபேவின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தனர். அங்கே வந்த காவல்துறையினர், ராகுல் துபேவிடம் போராட்டக்காரர்கள் பற்றி விசாரித்தனர். அதற்கு துபே, காவலர்களிடம், இல்லை இல்லை, நான்தான் அவர்களை அழைத்தேன் என்று பதில் சொன்னார்.
மறுநாள் காலை வரை போராட்டக்காரர்கள் துபேவின் வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கியிருந்து, விடிந்ததும் வார்த்தைகளுக்குள் அடங்காத நன்றியை செலுத்திவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றனர்.
இது பற்றி ராகுல் துபேவிடம் கேட்டபோது, 'மிக அவசியமான ஒன்றைத்தான் செய்ததாக' மிகவும் எளிமையான பதிலை உதிர்க்கிறார்.
இன்று அமெரிக்காவின் உள்ளூர் ஊடகங்கள் பலவற்றிலும் ராகுல் துபேவின் செய்தியும், பேட்டியும்தான் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. உள்ளூர் நாயகனாக உருவாகியுள்ளார் ராகுல் துபே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...