நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், அது புரளி என்று சகோதரர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தியை மேற்கோள்காட்டி, தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கூறியதாக வெளியான தகவலில், தாவூத் இப்ராஹிமுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அவர் உட்பட குடும்பத்தினர் அனைவருமே வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாவூத் இப்ராஹிமுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் நேற்று வெளியான செய்தியில் கூறப்பட்டிருந்தது.
மும்பையில் பிறந்த தாவூத் இப்ராஹிம், இந்தியாவுக்கு வெடிபொருள்களை கடத்தி வருதல், குண்டுவெடிப்புகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக 1993ஆம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் கடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பர் உயிரிழந்த விவகாரத்தில் தாவூத் இப்ராஹிம் முக்கியக் குற்றவாளியாவார்.
இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இவர் தற்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.