

உலக அளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை எட்டிவிட்டது. சுமார் 2.50 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகமே கரோனா தொற்றின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், இதே உலகில் இருக்கும் 11 நாடுகளில் இதுவரை கரோனா தொற்றின் பாதிப்பே இல்லை என்ற தகவல் அனைவரின் புருவங்களையும் சற்றே உயர்த்தியுள்ளது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபிறகு இன்றைய தேதி வரை சுமார் 210 நாடுகளில் கரோனாவின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உலகப் பேரழிவாக அறிவிக்கப்பட்ட இந்த கரோனா தொற்று 11 நாடுகளில் மட்டும் தலைகாட்டவில்லை.
அவைகளாவன: வடகொரியா, துர்க்மெனிஸ்தான், சாலமோன் தீவுகள், வானுவட்டு, கிரிபட்டி, மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி நாடுகள், நௌரு, நியுவே, பலாவு, சமோவா, டோங்கா ஆகிய நாடுகளில் இதுவரை கரோனா தொற்றுப் பரவல் ஏற்படவேயில்லை.
இதேபோல உலகின் மேலும் 10 பகுதிகளும் கரோனா தொற்றில் இருந்து விலகியே உள்ளன. ஆனால், அவை பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் சுயாட்சிப் பெற்ற பிரதேசங்கள் ஆகும்.
வடகொரியா, துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகள், கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதுமே, மிகத் தீவிரமான முறையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, உலகில் இருந்து தங்களது நாடுகளைத் தனிமைப்படுத்திக் கொண்டதன் விளைவாக, கரோனாவால் இந்த நாடுகளுக்குள் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது.
இதேபோல பிற தீவுகளும், நடுக்கடலில் இருப்பதால், இங்கு பொதுமக்கள் சென்று வருவதே அவ்வளவு எளிதல்ல என்பதாலும், வேறு எந்த நாட்டுடனும் நிலப்பரப்பில் எல்லைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதாலும் கரோனா தொற்றுக்கு இந்த தீவுகளுக்குள் நுழைவது மிகச் சிரமமான காரியமாகத் தெரிந்திருக்கும் போல. அதன் பயனாக இந்த தீவுகள் இன்னமும் கரோனா இல்லாத தேசமாகத் திகழ்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.