
விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது கருப்பின இளைஞரின் கழுத்தை, அமெரிக்க காவலர் ஒருவர் தனது முட்டியால் அழுத்திக் கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவின் மினஸ்சோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த திங்கள் அன்று, கருப்பினத் இளைஞர் ஃப்லோய்ட்டை சந்தேகத்தின் பேரில் நான்கு காவலர்கள் கைது செய்தனர். அப்போது ஃப்லோய்ட்டை சாலையில் கிடத்தி, அவரது கழுத்து மீது காவலர் ஒருவர் தனது முட்டியை மடக்கி வைத்து தாக்கினார். இதில் அந்த நபர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அந்த விடியோவில், தன்னால் மூச்சு விட முடியவில்லை என்றும், கொன்றுவிடாதீர்கள் என்றும் அவர் பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் கருப்பினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பல இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறியுள்ளது.
அதோடு, போராட்டக்காரர்கள் மினியாபோலிஸ் காவல்நிலையத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, ஃப்லோட்டை தாக்கிக் கொன்ற காவலர் டேரக் சௌவ்வின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 3-ம் நிலை கொலைக் குற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றி முதல் நிலைக் கொலைக் குற்றமாக பதிவு செய்யுமாறு தொழிலாளியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படுகொலை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மினியாபோலிஸ் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டம் என்ற பெயரில் கலவரங்களில் ஈடுபடுவது, போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும். எங்களிடம் ராணுவம் தயாராக உள்ளது. போராட்டம் கலவரமானால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று பதிவிட்டிருந்தார்.
இது போராட்டக்காரர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.