பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று கனமழை பெய்தது. இந்த கனமழைக்கு பல்வேறு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. லாகூரின் ஹர்பன்ஸ்புரா பகுதியில் வீடு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியினர். 5 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் ஷேகுபுரா மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் புதைந்தனர். சக்வால் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர். இதுவரை பாகிஸ்தானில் கனமழைக்கு 24 பேர் பலியாகியுள்ளனர்.
அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களுக்கு நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்றும் இதனால் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.