
30 கோடி கி.மீ தொலைவு பயணித்து பூமியை அடைந்த விண்கல் மாதிரிகள்
30 கோடி கி.மீ. தொலைவு பயணித்து சேகரிக்கப்பட்ட விண்கல்லின் மாதிரிகள் பூமியை அடைந்தன.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்து ஹயாபுசா-2 எனப் பெயரிடப்பட்ட விண்கலமானது விண்கல்லிலிருந்து மண் துகள்களை சேகரிக்க விண்ணில் ஏவப்பட்டது.
நான்கு ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு விண்கல்லை அடைந்த ஹயாபுசா-2 அங்கு சிறுவெடிப்பை ஏற்படுத்தி சிதறிய மண் துகள்களை சேகரித்தது. அதனைத் தொடர்ந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிய ஹயாபுசா-2 சுமார் 30 கோடி கி.மீ தூரம் பயணித்து ஞாயிற்றுக்கிழமை பூமியை அடைந்தது.
ஆஸ்திரேலியாவின் வூமேரா அருகே ஹயாபுசா-2வின் பாகம் தரையிறங்கியபோது விஞ்ஞானிகள் பலத்த கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து விண்கலத்தின் பாகமானது டோக்கியோவில் உள்ள ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (ஜாக்ஸா) ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விண்கல் மாதிரிகள் சூரிய மண்டலத்தின் தோற்றம், பூமியின் தோற்றத்திற்கு காரணமான கரிமப் பொருட்கள் குறித்த ஆய்வுக்கு உதவும் எனக் கருதப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...