
சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ்
உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ் நோபல் பரிசு பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
வளரும் நாடுகளை பாதிக்கும் பொருளாதாரக் காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டமைக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு சர் லூயிஸ் நோபல் பரிசு பெற்றார்.
சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ்
பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான சர். டபிள்யூ. ஆர்தர் லூயிஸ், கரீபியன் தீவான செயின்ட் லூசியாவில் உள்ள காஸ்ட்ரீஸில் 1915, ஜனவரி 23ல் பிறந்தார். ஆரம்பத்தில் பொறியியல் படிக்க ஆசைப்பட்ட அவர் கறுப்பின பாகுபாட்டால் பொருளாதாரத் துறையைத் தேர்வு செய்தார்.
இன பாகுபாட்டுக்கு மத்தியிலும், அவர் 1932 ஆம் ஆண்டில் அரசின் உதவியுடன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் பொருளாதாரம் பயின்று பிற்காலத்தில் பொருளாதாரம் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் முனைவர் பட்டம் பெற்றார்.
1954 ஆம் ஆண்டில், பொருளாதாரம் குறித்த 'வரம்பற்ற தொழிலாளர்களுடன் கூடிய பொருளாதார மேம்பாடு' என்ற தனது கட்டுரையை வெளியிட்டார். 1979ல் நோபல் பரிசும் பெற்று சாதனை படைத்தார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதல் கறுப்பின ஆசிரியராகவும், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் (மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்) சிறப்பு இருக்கை பெற்ற முதல் கறுப்பினத்தவர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராக இருந்த முதல் கறுப்பின ஆசிரியர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார்.
1963 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவருக்கு சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. 1991 ஜூன் 15ல் மறைந்தார்.