
அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்க கனடா அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,
2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ஆம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மொத்தம் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் துறை அமைச்சர் மார்கோ மெடிசினோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
இதனால் கனடாவில் நடுத்தர சமுதாயத்தின் கட்டமைப்பை பலப்படுத்த முடியும். கனடாவில் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். உலகளவிலான மனிதகுல வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற முடியும். திறமை வாய்ந்த இளைஞர்களின் வரவு காரணமாக கனடா மக்கள் தொகை இளமை பெறும். இதனால் உலகளிலான பொருளாதார சவால்களை எளிதில் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள் பலர் பலனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியேற்ற விதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த 2019-ன் கணக்கீடுப் படி கனடாவில் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கப்பட்டவர்களில் 4-ல் ஒருவர் இந்தியர்.
2019ஆம் ஆண்டில் மட்டும் 3.41 லட்சம் புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாகத் தங்க கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 85,585 பேர் இந்தியர்கள், இதன் சராசரி 25.1 சதவீதம் ஆகும். எனவே கனடாவின் இந்த புதிய அறிவிப்பு காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்பத்துடன் நிரந்தரமாகத் தங்கும் வசதி கிடைப்பதால் மேலும் பல இந்தியர்கள் கனடாவில் குடியேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் கனடா நாட்டின் குடியுரிமையைப் பெறும் வசதியும் ஏற்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...