பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகளை தண்டிக்கும் கடவுளின் வேலை இது என்று கரோனா வைரஸ் குறித்து ஜிம்பாப்வே பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. உலகளவில் 150,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கரோனாவைரஸ் குறித்து பேசிய ஜிம்பாப்வேயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்பா முச்சின்குரி, 'எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகளை தண்டிக்கும் கடவுளின் வேலை இது' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் ஒன்றும் கடவுள் இல்லை என்பதை தற்போது புரிந்திருப்பார். கரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை அவர் உணர்வதன் மூலமாக எங்களது வலியை உணர வேண்டும்.
அவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். நமக்கு செய்ததைப் போலவே அவர்களின் பொருளாதாரங்களும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன' என்று பேசியுள்ளார்.
முன்னதாக, நவம்பர் 2017ல் ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட மறைந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் ஆட்சியின்போது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
அதன்பின்னர், ஜிம்பாப்வே இடைக்கால அதிபராக எம்மர்சன் மனங்காக்வா 2017ல் பதவியேற்றார். அவர் மேற்கு நாடுகளுடன் நட்புறவை மேற்கொள்ள போராடி வரும் நிலையிலும், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.