ஜெனீவா: கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா உட்பட கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பலவும் ஊரடங்கு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதையே இந்தியாவில் சரியாக பின்பற்ற முடியாத நிலையில், அது மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து டெட்ரோஸ் கேப்ரியசஸ் கூறுகையில், பல உலக நாடுகள் ஊரடங்கு முறையைப் பின்பற்றி வருகின்றன. இதனால் கரோனா பரவல் சற்று வேகம் குறையலாம். ஆனால், கரோனா எனும் பெருந்தொற்று நோய் பரவலை ஊரடங்கு மட்டுமே எதிர்கொண்டுவிட முடியாது. கரோனா வைரஸைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். கரோனாவை அழிக்க அடுத்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். கரோனாவை அழிக்க அடுத்த வழி என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
கரோனா பாதித்தவரை தனிமைப்படுத்துவது, அறிகுறி தென்பட்டதுமே பரிசோதனை செய்வது, சிகிச்சை அளிப்பது, கரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவது போன்றவற்றில் தீவிரம் செலுத்த வேண்டும். இதனை தீவிரப்படுத்துவதோடு, வேகப்படுத்த வேண்டும். அதுதான் கரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.