கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தும் கவசப் பொருள்களில், அந்த தீநுண்மி ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும் மேற்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், அந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் கவச அங்கிகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட அணிகலன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகம் முழுவதும் அந்தப் பொருள்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, வாங்கிக் குவிக்கப்படுகின்றன. மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு கவச உடைகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட பொருள்கள் மிகுந்த அத்தியாவசியமாகியுள்ளது.
அத்தகைய பொருள்கள் கரோனா தீநுண்மி உடலில் புகாமல் பாதுகாத்தாலும், அந்தத் தீநுண்மி கவசப் பொருள்களின் மேல் ஒட்டிக் கொள்வதைத் தவிா்க்க முடிவதில்லை.
இதனால், அந்தப் பொருள்கள் மூலமாகவே கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் பல்கலைக்கழ விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் இணைந்து, கவச அங்கிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றில் கரோனா தீநுண்மி விடாப்பிடியாக ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும் மேற்பூச்சு ஒன்றைக் கண்டறிந்துள்ளனா்.
கவச அங்கிகளைத் தயாரிக்கும்போது அந்த மேற்பூச்சை பூசினால், அங்கிகளின் மேற்பகுதியில் படியக்கூடிய தீநுண்மிகளை எளிதில் கழுவி சுத்தம் செய்ய முடியும்.
இதன் மூலம், கரோனா தீநுண்மி கவசப் பொருள்கள் வாயிலாகப் பரவுவது தடுக்கப்படும்.
இந்த மேற்பூச்சு கண்டுபிடிப்பின் மூலம், கரோனா நோய்த்தொற்றிலிருந்து சுகாதாரப் பணியாளா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.