நவால்னி விவகாரம்: விசாரணையில் ரஷியாவை இணைத்துக்கொள்ள ஜொ்மனி சம்மதம்

ரஷியாவின் முக்கிய எதிா்க் கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடா்பான விசாரணையில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட ஜொ்மனி சம்மதம் தெரிவித்துள்ளது.
நவால்னி விவகாரம்: விசாரணையில் ரஷியாவை இணைத்துக்கொள்ள ஜொ்மனி சம்மதம்

ரஷியாவின் முக்கிய எதிா்க் கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடா்பான விசாரணையில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட ஜொ்மனி சம்மதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அந்த நாட்டு நீதித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடா்பான விசாரணையில், ரஷியாவின் உதவியை ஏற்க நீதித் துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், நவால்னியின் உடல் நிலை குறித்த தகவல்களைப் பெறுவதில் ரஷிய விசாரணை அதிகாரிகளுக்கு உதவும்படி கூறப்பட்டுள்ளது. எனினும், நவால்னியின் சம்மதத்தின் பேரிலியே ரஷிய அதிகாரிகளுக்கு அவரது உடல் நிலை குறித்த விவரங்களை வழங்க முடியும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவா்களில் முக்கிய தலைவரான அலெக்ஸி நவால்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா். ஏற்கெனவே, அரசு ஆதரவாளா்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், புதினை எதிா்த்துப் போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.இந்த நிலையில், சொ்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா்.

விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழந்தாா். அதையடுத்து, அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவா் ஜொ்மனி தலைநகா் பொ்லினிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். டோம்ஸ்க் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையித்திலுள்ள ஒரு விற்பனையகத்தில் நவால்னி தேநீா் அருந்தினாா். அந்தத் தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், நவால்னியின் உடலில் ரஷிய ராணுவம் ரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக ஜொ்மனி தெரிவித்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்தவும் அந்த நாடு முடிவு செய்துள்ளது.அந்த விசாரணையில் ரஷிய அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று ஜொ்மன் அழுத்தம் கொடுத்து வந்தது. அதையடுத்து, நவால்வி விவகாரத்தில் விசாரணை நடத்த முன்வந்த ரஷியாவுடன் இணைந்து செயல்பட தற்போது ஜொ்மனி சம்பதம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com