
கரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன் 20 லட்சம் மக்கள் இறக்கலாம்: உலக சுகாதார நிறுவனம்
கரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன் உலக அளவில் 20 லட்சம் மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 16 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர்.
உலக முழுவதும் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷியாவில் கடந்த மாதம் கரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான் கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலை பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20 லட்சம் மக்கள் கரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் உலகத் தலைவர்கள் உயிர்காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனக் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...