ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிறகு, பிரிட்டன் தனக்கான வர்த்தக கொள்கைகளை வகுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு அயர்லாந்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் வியாழக்கிழமை இரவு புரட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடையவே, போராட்டக்கார்களைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது.
வடக்கு அயர்லாந்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தை மூலமாக மட்டும் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும், வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்று கூறியிருந்தார்.
அதேபோன்று, போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று மற்ற தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.