ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி தொடரும் வரை தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் படைகளுக்கும் தலிபான்களுக்குமிடையே தொடர் மோதல் வெடித்துவரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி தொடரும் வரை தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய இம்ரான் கான், "இன்றைய சூழலில், அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணப்படுவது கடினமான ஒன்று. மூன்று மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தலிபான்கள் வந்தபோது, பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என அவர்களிடம் அறிவுறுத்தினேன்.
அதற்கு அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர். அஷ்ரப் கனி அதிபராக தொடரும் வரை பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டோம் என அவர்கள் கூறினார்கள்" என்றார்.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 20.55 கோடியைக் கடந்தது!
ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரிப்பதற்கும் அரசியல் நிலையற்ற தன்மை நீடிப்பதற்கும் பாகிஸ்தானே காரணம் என ஆப்கான் அரசு விமர்சனம் முன்வைத்திருந்தது. சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் மக்கள் ட்விட்டரில் பரப்புரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.