காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: மக்கள் வெளியேற மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்

காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி மக்களுக்கு மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தலிபான் படையினா் (கோப்புப் படம்)
தலிபான் படையினா் (கோப்புப் படம்)

காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி மக்களுக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படியும் மேற்கத்திய நாடுகள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து. அமெரிக்க விமானங்கள் மூலம் கிட்டத்தட்ட 90,000 ஆப்கானியர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினர். 

ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் மீட்பு பணிகள் முடிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில், தங்களின் விமான சேவைகளை சில நாடுகள் நிறுத்தி கொண்டன.

இருப்பினும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையம் சுற்றி மக்கள் குவிந்துள்ளனர். மீ்ட்பு பணிக்கான காலக் கெடுவை அமெரிக்கா விதித்ததற்கு ஐஎஸ் குழு விடுத்த பங்கரவாத அச்சுறுத்தலே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, விமான நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், "அபே கேட், கிழக்கு கேட், வடக்கு வாசலில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்" என தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com