காபூலிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ள தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா அமைப்புக்கு பாதுகாப்பு அளிக்கிறது எனக் கூறி கடந்த 2001ஆம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படை எடுத்தது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் தலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவருகிறது. இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும், 1,000 பேர் காபூல் விமான நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மீட்பு பணிகள் எந்த தேதி, எந்த நேரம் முடிவடையும் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், ஆபத்தில் உள்ளவர்கள் என அனைவரும் இன்றுக்குள் மீட்கப்படுவதை உறுதி செய்துவருகிறோம்.
மீட்பு பணிகள் முடிந்தவுடன் படைகள் வெளியேறும். மீட்பு பணிகளில் மொத்தம் 5,800 படைகள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது, இது 4,000க்கும் குறைவாக உள்ளது" என்றார். இந்நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எங்களிடம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர். காபூல் விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டை துரிதமாக எடுத்து கொள்ள அமெரிக்கர்களின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
இதையும் படிக்க | எங்கே தலிபான் தலைவா்?
தோஹா அமைதி பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவ படைகள் வெளியேறும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை அமெரிக்க படைகள் முழுவதும் அங்கிருந்து வெளியேறும் என பைடன் என தெரிவித்திருந்தார்.