ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்த அமெரிக்க படைகள் நாளையுடன் முழுமையாக விலக்கி கொள்ளப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப் படைகள் சண்டையிட்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
இதன் விளைவாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து, ஆப்கனில் தங்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும் பணியை ஆகஸ்ட் 14 முதல் அமெரிக்க படைகள் விரைவுபடுத்தியது. கடந்த 15 நாள்களில் சுமார் 1,20,000 மக்களை அமெரிக்க படைகள் வெளியேற்றினர்.
இதையும் படிக்க | மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், நாளையுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விதிக்கப்பட்ட காலவகாசம் நிறைவடைவதையடுத்து காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள எஞ்சியுள்ள அமெரிக்க படை வீரர்களும் நாடு திரும்ப வாய்ப்புள்ளது.
இதன்மூலம் கடந்த 2001 முதல் ஆப்கனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படவுள்ளது.