
இந்தியாவுக்கு இரு கடற்படை ஹெலிகாப்டா்களையும் பி-8 பொசைடன் கண்காணிப்பு விமானத்தையும் விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டன் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமெரிக்க கடற்படையிடமிருந்து 24 எம்ஹெச்-60ஆா் சீஹாக் ரக ஹெலிகாப்டா்களை இந்தியக் கடற்படை கடந்த வாரம் பெற்றது.
மேலும், 10-ஆவது போயிங் பி-8 பொசீடன் வகை கண்காணிப்பு விமானத்தையும் இந்திய கடற்படை அமெரிக்கக் கடற்படையிடமிருந்து பெற்றுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது பி-8 கண்காணிப்பு விமானத்தை அளிக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பும் தகவல் பரிமாற்றங்களும் மேம்படும் என்றாா் அவா்.
எல்லா பருவ காலங்களிலும் சிறப்பாக செயல்படக் கூடிய எம்ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை கடற்படையின் பல்வேறு போா் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியும். அவற்றில் ஏவுகணை உள்ளிட்ட பிரத்யேக ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பொருத்திக் கொள்ள முடியும்.
அந்த ரக ஹெலிகாப்டா்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.