எத்தியோப்பியா டைக்ரே போராளிக்குழுக்களை எதிர்த்து அந்நாட்டு அரசுபடைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் அபி அகமது களத்திலிருந்து ராணுவத்தை வழிநடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போரை நிறுத்தி தீர்வு காண வேண்டும் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துவருகிறது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள எத்தியோப்பியாதான், அந்த கண்டத்தின் மக்கள் தொகை அதிகமுள்ள இரண்டாவது பெரிய நாடாகும். போர் காரணமாக, அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் பஞ்சத்தில் வாழ்ந்துவருகின்றனர்.
போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டிலிருந்து வெளியேறும்படி தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளிநாடுகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. தலைநகரை அடிஸ் அபாபாவை நோக்கி டைக்ரே போராளிக்குழுக்கள் படை எடுக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பிரதமர் அபி அகமது, களத்தில் இருந்து கொண்டு ராணுவத்தை வழிநடத்திவருவதாக ஃபனா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் ரேடியோ ஆபரேட்டராக பணியாற்றிவந்த அபி, லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெற்றார். ஆனால், அவர் தற்போது எங்கிருந்து வழிநடத்துகிறார் என்பது குறித்த தெரியவில்லை. அதேபோல், போர் களத்தில் அவர் நிற்பது போன்ற புகைப்படங்களை இதுவரை அரசு ஊடகம் வெளியிடவில்லை. அவர் எங்குள்ளார் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
எத்தியோப்பியா போருக்கு ராணுவ ரீதியான தீர்வு சரியானது அல்ல என அமெரிக்க எச்சிரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்துத் தரப்பினரும் எரிச்சலூட்டும், போர்க்குணமிக்க சொற்களை தவிர்க்கவும், கட்டுப்பாட்டுடன் இருக்கவும், மனித உரிமைகளை மதிக்கவும், மனிதாபிமான அணுகலை அனுமதிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.