ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேரில் நடைபெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக போராளிக்குழு தெரிவித்ததாக ஸ்புட்னிக் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து போராளிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பஞ்சஷேரில் பல்வேறு மாவட்டங்களில் காலையிலிருந்து நடைபெற்றுவரும் மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் அல்லது சரணடைந்துள்ளனர்.
ஆப்கனின் மற்ற பிராந்தியங்களிலிருந்து போதுமான பொருள்கள் கிடைப்பதில் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றார். பஞ்சஷேர் பள்ளித்தாக்கு பகுதிகளில் கண்ணிவெடி வைத்திருப்பதால் போராளிக்குழுகளை எதிர்த்து போராடுவது தலிபான்களுக்கு சிரமமாக உள்ளது. "பள்ளித்தாக்கு பகுதிகளில் தொடர்ந்து போரிட்டுவருகிறோம்.
ஆனால், தலைநகர் பஜராக் மற்றும் ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலைகளில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருப்பதால் முன்னேறுவதில் சிரமம் இருக்கிறது" என தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னாள் முஜாஹிதீன் தளபதி அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே ஆகியோரின் தலைமையில் தேசிய எதிர்ப்பு முன்னணி தலிபான்களை எதிர்த்து போரிட்டுவருகின்றனர்.