மாஸ்கோ: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700-க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷியா முழுவதும் வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,700-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் அலெக்ஸி நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜொ்மனி மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா்.
தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்த அவா், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி ரஷியா திரும்பிய உடன் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
மற்றொரு வழக்கு ஒன்றில் பரோல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே நச்சுத் தாக்குதலில் இருந்து பிழைத்து வந்த அவரை, சிறையில் அவரது சொந்த மருத்துவா்கள் சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறாா்.