காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 28 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்நாட்டிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
ஆப்கன் குடிமக்களும் தலிபான்களுக்கு அஞ்சி சொந்த நாட்டிலிருந்து வெளியேறும்பொருட்டு காபூல் விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், அங்கிருந்த மக்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமெரிக்க வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டதாகவும் சுமார் 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் ஆப்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களை இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 100-யைக் கடந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. அதுபோல காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 60 ஆப்கானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தாக்குதலில் பலியானவர்களில் 28 பேர் தலிபான்கள் என்றும் அமெரிக்கர்களை விட அதிகமான மக்களை நாங்கள் இழந்துவிட்டோம் என்றும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஆனால், தலிபான்களுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக துணை அதிபர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.