பாகிஸ்தானில் ஒமைக்ரான் கரோனா பாதிப்பு இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை கரோனா தற்போது 38 நாடுகளில் பரவியுள்ளது.
ஒமைக்ரான் வகை பாதிப்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் தீவிரமாக பரவக்கூடியது என்றும் பல்வேறு விதமாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், டெல்டா அளவுக்கு ஒமைக்ரான் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் முதல்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், பாகிஸ்தானில் ஒமைக்ரான் கரோனா பாதிப்பு இல்லை என்றும் இன்னும் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
அதாவது, இஸ்லாமாபாத்தில் பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை. அவருக்கான பரிசோதனை இன்னும் முடியவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.