ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்படைந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. டோக்கியோ மருத்துவ மையத்தின் இயக்குனர் கசுஹிரோ அராக்கி முதல் நபராக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கடந்த சனிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கத்தின் காரணமாக கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதில் ஏற்பட்ட தொய்வு சரிசெய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் கரோனா தடுப்பூசிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் யோஷிஹைட் சுகா ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.