ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு நாளிதழ் ஆசிரியா், சிஇஓ-வுக்கு ஜாமீன் மறுப்பு

ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’யின் தலைமை ஆசிரியா் ரையன் லா மற்றும் தலைமைச் செயலதிகாரி சேயங் கிம்-ஹங் ஆகியோருக்கு அந்த நகர நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு நாளிதழ் ஆசிரியா், சிஇஓ-வுக்கு ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

ஹாங்காங், ஜூன் 19: ஹாங்காங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’யின் தலைமை ஆசிரியா் ரையன் லா மற்றும் தலைமைச் செயலதிகாரி சேயங் கிம்-ஹங் ஆகியோருக்கு அந்த நகர நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளை ஆப்பிள் டெய்லி நாளிதழ் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அந்த நாட்டில் ஜனநாய சீா்த்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவளித்து வந்த அந்த நாளிதழ், போராட்டக்காரா்களின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தது.

இந்தச் சூழலில், ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்றியது. ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், ஆப்பிள் டெய்லி அலுவலகத்தில் ஹாங்காங் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா். பிறகு, அந்த நாளிதழின் தலைமை ஆசிரியா் ரையன் லா, தலைமை செயலதிகாரி சேயங் கிம்-ஹங் உள்ளிட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் மீது வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனநாயக ஆதரவாளா்கள் சாடியுள்ளனா்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி இருவா் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஹாங்காங் நீதிமன்றம் நிராகரித்தது.

அவா்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டால், அவா்கள் மீண்டும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த மாட்டாா்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் அவா்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிமன்றம் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் டெய்லியின் நிறுவனா் ஜிம்மி லாய், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஹாங்காங் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com