
அந்தோணி ஃபாசி
வாஷிங்டன்: இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனாவால் அமெரிக்கா மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளதாக அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு தலைவா் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் 20 சதவீதத்தினருக்கு, டெல்டா வகை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனைப் போலவே, அமெரிக்காவுக்கும் இதனால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் மிக வேகமாகப் பரவக் கூடிய டெல்டா வகை கரோனா பின்னடைவை ஏற்படுத்தும்.
எனினும், அந்த வகைக் கரோனாவுக்கு எதிராக அமெரிக்காவில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவது திருப்தியளிக்கிறது. இதன் மூலம், நம்மிடம் உள்ள வசதியைப் பயன்படுத்தி டெல்டா கரோனாவை வீழ்த்த வேண்டும் என்பது தெளிவாகிறது என்றாா் அவா்.