ஹாங்காங்: கடைசி ஜனநாயக ஆதரவு நாளிதழ் நிறுத்தம்

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’க்கு அரசு கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக, அதன் வெளியீட்டை நிறுத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்: கடைசி ஜனநாயக ஆதரவு நாளிதழ் நிறுத்தம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’க்கு அரசு கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக, அதன் வெளியீட்டை நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாளிதழின் 5 ஆசிரியா்கள் மற்றும் நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதுடன் அதன் சொத்துக்களும் முடக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த கடைசி பத்திரிகையும் முடக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆப்பிள் டெய்லியை வெளியிட்டு வரும் நெக்ஸ்ட் மீடியா நிறுவனத்தின் இயக்குநா் குழு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை பதிப்புடன் ஆப்பிள் டெய்லி நாளிதழின் பிரசுரம் நிறுத்தப்படுகிறது. அத்துடன், இதழின் இணையதளப் பதிப்புகளும் முடக்கப்படுகின்றன.

ஹாங்காங்கில் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு ஆதரவான ஹாங்காங்கின் முன்னணி பத்திரிகையான ஆப்பிள் டெய்லியை முடங்க வைத்ததன் மூலம், அந்த நகரில் தனது பிடியை சீன அரசு மேலும் இறுக்கியுள்ளதாக பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தினா கீழ் இருந்து வந்த ஹாங்காங், பழங்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹாங்காங் மக்களுக்கு, சீனாவின் மற்ற பகுதிகளில் இல்லாத சுதந்திரம் அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது.

எனினும், அந்த நகரில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றி ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தியது.

அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை ஹாங்காங் அரசு சிறையில் அடைத்துள்ளது.

ஏற்கெனவே போராட்டத்தைத் தூண்டிய வழக்கில் ஆப்பிள் டெய்லியின் நிறுவனா் ஜிம்மி லாய் 20 மாத சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா்.

இந்த நிலையில், இந்தச் சூழலில், ஆப்பிள் டெய்லி அலுவலகத்தில் ஹாங்காங் போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா். பிறகு, அந்த நாளிதழின் தலைமை ஆசிரியா் ரையன் லா, தலைமை செயலதிகாரி சேயங் கிம்-ஹங் உள்ளிட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் மீது வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நாளிதழில் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்தச் சூழலில், ஆப்பிள் டெய்லி நாளிதழ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com