உலக சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வில், கரோனா வைரஸ், வௌவாலிடமிருந்து வேறு ஏதேனும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விலங்குகளிடமிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், ஆய்வுக் கூடத்திலிருந்து கரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பு தயாரித்திருக்கும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அசோஸியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், கரோனா வைரஸானது எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது குறித்து பல புதிய விளக்கங்களை அளித்தபோதிலும், அந்த கேள்விக்கான சரியான பதிலை இந்த வரைவு அறிக்கை வழங்கவில்லை.
ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதைத் தவிர பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கரோனா வைரஸ் எப்படி பரவியிருக்கலாம் என்பது குறித்து ஆய்வு நடத்தவும் இந்த வரைவு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
கரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பது, எதிர்கால வைரஸ் தோன்றல் போன்ற பேரிடர்களைத் தவிர்க்க பேருதவியாக இருக்கும், ஆனால், தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்துவதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டையிட்டு வருகிறது.
அதோடு, உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கை வெளியிடுவதில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாமதம், அறிக்கையின் முடிவுகளில் திருத்தம் செய்ய சீன தரப்பில் முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.