இந்திய எல்லையையொட்டி சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திடம் பென்டகன் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே தாங்கள் உரிமை கொண்டாடும் பகுதிகள் தங்களுக்குதான் சொந்தம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சீன ராணுவம் அந்தப் பகுதியில் தனது நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகிறது.
இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தப் பதற்றத்தின் விளைவாக அமெரிக்காவுடன் இந்திய உறவு பலப்படுவதைத் தடுக்க சீனா விரும்புகிறது.
அதற்காக, இந்திய - சீன உறவு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று சீன அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனா்.
இருந்தாலும், சீனாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.