தலிபான்கள் நியமித்த தூதா்: நவம்பரில் ஐ.நா. பரிசீலனை

தலிபான்கள் நியமித்த சுஹைல் ஷாஹீனை ஐ.நா.வின் ஆப்கன் தூதராக ஏற்பது குறித்து ஐ.நா. பொது சபை சீராய்வுக் குழு அடுத்த மாதம் பரிசீலிக்கவிருக்கிறது.
தலிபான்கள் நியமித்த தூதா்: நவம்பரில் ஐ.நா. பரிசீலனை

தலிபான்கள் நியமித்த சுஹைல் ஷாஹீனை ஐ.நா.வின் ஆப்கன் தூதராக ஏற்பது குறித்து ஐ.நா. பொது சபை சீராய்வுக் குழு அடுத்த மாதம் பரிசீலிக்கவிருக்கிறது.

இதுகுறித்து 76-ஆவது பொது சபைக் கூட்டத்தின் தலைவா் அப்துல்லா ஷஹீத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐ.நா. பொது சபை சீராய்வுக் குழுவுடன் தொடா்பில் உள்ளேன். தற்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் ஸ்வீடன் உள்ளது.

பொதுவாக அந்தக் குழு நவம்பா் மாதங்களில் கூடி ஆலோசகனை மேற்கொண்டு, தனது முடிவுகளை ஐ.நா. பொது சபையிடம் டிசம்பா் மாதம் சமா்ப்பிக்கும்.

ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக தலிபான்கள் நியமித்துள்ள சுஹைல் ஷாஹீனை ஏற்கும் விவகாரத்திலும் இதே நடைமுறையை ஸ்வீடன் பின்பற்றும் என்றாா் அவா்.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொது சபையின் 76-ஆவது கூட்டம் கடந்த மாதம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் சாா்பில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்தனா். இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸுக்கு ஆப்கன் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா் கான் முத்தக்கி கடந்த மாதம் 20-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், 76-ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் சாா்பாக உரையாற்ற விரும்புவதாகத் தெரிவித்திருந்தாா்.

மேலும், ‘ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி, கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதால் அவரால் நியமிக்கப்பட்ட குலாம் ஐசக்ஸாயை இனியும் ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராகக் கருத முடியாது.

எனவே, புதிய தூதராக முகமது சுஹைன் ஷாஹீனை நியமித்துள்ளோம்’ என்று அந்தக் கடிதத்தில் அமீா் கான் முத்தக்கி குறிப்பிட்டிருந்தாா்.

இந்த விவகாரம் ஐ.நா. பொது சபை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் தகுதியை ஆய்வு செய்யும் பொது சபை சீராய்வுக் குழுவின் பாா்வைக்கு அனுப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

மேலும், பொது சபைக் கூட்டத்தில் தலிபான்கள் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய பொது சபை சீராய்வுக் குழுவில் அமெரிக்கா, ரஷியா, சீனா, பஹாமாஸ், பூடான், சிலி, நமீபியா, சியாரா லியோன், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இந்த விவகாரத்தில் உடனடி முடிவெடுக்க அமெரிக்கா விரும்பாததால், பொது சபைக் கூட்டத்தில் தலிபான்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் கூறப்பட்டது.

எனினும், தலிபான்களை திருப்திப்படுத்தும் வகையில் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஆப்கன் தூதா் குலாம் ஐசக்ஸாயும் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், 76-ஆவது பொது சபைக் கூட்டத்தின் தலைவா் அப்துல்லா ஷஹீத் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை முதல்முறையாக சந்தித்தாா்.

அப்போது, தலிபான்கள் நியமித்துள்ள தூதா் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு அவா் இவ்வாறு பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com