மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 103.5 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 103.5 கோடி (1,03,53,51,045) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் மாநிலங்களில் 10.85 கோடி (10,85,69,250) தடுப்பூசிகள் இருப்பில் அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவச தடுப்பூசியை வழங்கி வருகிறது. ஜூன் 21 முதல்புதிய தடுப்பூசி இயக்கத் திட்டத்தின்படி மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 75% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
நாட்டில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 9 மாதங்களில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 100 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா்.