ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவா்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்லா்; அத்தாக்குதலில் பலியானவா்கள் பொதுமக்கள் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இது மிகப்பெரிய தவறு, மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறோம். ராணுவ தளபதி என்ற முறையில் இந்த தவறுக்கு நானே முழு பொறுப்பேற்கிறேன் என்று பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்க ராணுவ தளபதி ஃபிராங்க் மெக்கென்ஸி கூறினார்.
ஆப்கன் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே கடந்த மாதம் இரு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அமெரிக்க படையினா் 13 போ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் ஆக. 29-ஆம் தேதி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமா்ந்திருந்த வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் அந்த இயக்கத்தைச் சோ்ந்த பலா் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
ஆனால், ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதற்கு போதிய ஆதாரம் இல்லை என செய்தி நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பின. இந்நிலையில், ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவா்கள் பொதுமக்கள்தான் என்றும், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இல்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.