சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.
அமெரிக்காவில் 1960களில் இருந்தே ராணுவத்தில் சினூக் என்ற வகை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 400 சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர்களில் தொடர்ந்து என்ஜின் தீ விபத்து புகார் காரணமாக சினூக் ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா முழுவதுமாக தடை விதித்துள்ளது.
இந்தியாவிடம் 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறைகள் போன்ற இடங்களில் இந்தியப் படைகளுக்கு உதவும் முக்கியமானதாக இந்த ஹெலிகாப்டர்கள் இருந்து வருகின்றன. 2019 பிப்ரவரியில் இந்தியா முதல்முறையாக சினூக் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கியது. 2020ல் இரண்டாவது தொகுதி ஹெலிகாப்டர்களைப் பெற்றது.
இந்தியாவிடம் சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டர்களை தயாரித்த அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் சினூக் ஹெலிகாப்டர்களின் சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு விவரங்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
போயிங் விளக்கத்தைப் பொருத்து இந்தியா அடுத்தகட்ட முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ‘சினூக்’ ஹெலிகாப்டரை நிறுத்தியது அமெரிக்க ராணுவம்: இந்தியா?