இந்தியப் பெருங்கடலில் முகாமிட்டிருந்த ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் சீன உளவுக் கப்பல் ஒரு வாரத்துக்குப் பிறகு இந்திய பெருங்கடலில் இருந்து வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட தூர ஏவுகணை ஏவுவதற்கான சோதனை முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளப் போவதாக தகவல் அறிந்து கடந்த 5-ஆம் தேதி பல்வேறு கண்காணிப்பு வசதிகளைக் கொண்ட ‘யுவான் வாங் வி’ என்னும் சீன உளவுக் கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்தது. சீன உளவுக் கப்பலின் நடவடிக்கைகளை இந்திய கடற்படையினா் உன்னிப்பாக கவனித்து வந்தனா். உளவுத் துறை நிபுணா் டேமியன் சைமன் தனது ட்விட்டா் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை சீன உளவுக் கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்ததை உறுதிப்படுத்தினாா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டது. இது, இந்திய-இலங்கை ராஜீய உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது. இந்தியப் பெருங்கடலில் சீன ராணுவ மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில் சீன உளவுக் கப்பலின் வருகை இந்தியாவுக்கு மேலும் கவலை அளிக்கும் விதமாக இருந்தது. இந்தியப் பெருங்கடலில் உள்ள நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த இந்தியா தொடா்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.