உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்கல் நடத்தப்படுவதால் பீதியடைந்துள்ள மக்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டுச் செல்கின்றனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணையாது என வாக்குறுதி அளிக்கப்பட்டால், தாக்குதல் இருக்காது என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க அமெரிக்கா உறுதியாகவுள்ள நிலையில், அதற்கு உக்ரைன் அரசும் சாதகமாக உள்ளதால், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு அதிபர் விளாதிமீர் புதின் இன்று வியாழக்கிழமை(பிப்.24) உத்தரவிட்டார். உக்ரைன் ராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், உக்ரைனை கைப்பற்றுவது ரஷியாவின் நோக்கம் அல்ல என்றும், அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைன் தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், உக்ரைனின் ராணுவமயமாக்கலையே ரஷியா எதிர்க்கிறது.
ரஷிய அரசையும், ரஷிய மக்களையும் அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக பதில் கொடுக்கப்படும் என்பதை உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் உலகுக்கு எடுத்துரைப்பதாகவும், ரஷியாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக யார் வந்தாலும் வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்றும் புதின் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவிட்டதையடுத்து, உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியுள்ள ரஷிய படைகள், தலைநகர் கீவ், கிழக்கி உக்ரைனில் உள்ள டொனஸ்க், ஒடோசா, கார்கிவ், மைக்கோல், மாரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு, வடக்கும், மேற்கு என மூன்று திசைகளில் இருந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷிய படைகள், கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு பகுதியில் இருந்து விமானப்படை மூலம் குண்டுகளை வீசி, உக்ரைன் விமான தளங்கள், விமானப்படையை முடக்கியுள்ளது.
மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழையை பொழிந்து வருவதால், அந்த பகுதியில் உச்சகட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் தாக்குதலில் 2 லட்சம் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் கிழக்கில் உள்ள லுசான்ஸ்க் பகுதியில் உள்ள 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கிளிர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு நகரங்களை சுதந்திரமான பகுதிகள் என்று ரஷியா அறிவித்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
லுசான்ஸ்க் நகரில் ரஷியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதிகம் பேர் வசிப்பதால் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷிய படைகளின் பல்முனை தாக்குதலால் பீதியடைந்துள்ள மக்கள், ஆயிரக்கணக்கான கார்களில் நகரங்களை விட்டு புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதனால் நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், அனைத்து ஏடிஎம் மையங்களையும் முற்றுகையிட்டு அவசர அவசரமாக பணத்தை எடுத்து வருகின்றனர்.
போர் மூண்டுள்ளதை அடுத்து உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய உக்ரைன் ராணுவத்துக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.