ஐக்கிய அரபு அமீரகத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கிய இரண்டு இந்திய தொழிலாளிகளுக்கு ரூ. 2.23 கோடி இழப்பீடு தொகையை காப்பீட்டுத் தீர்வுக் குழு வழங்கியுள்ளது.
ஷார்ஜா மற்றும் துபையில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளிகளான சாஜில் மற்றும் முகமது ஷரீஃப் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்களுக்கான காப்பீட்டுத் தொகை, தற்போது வழங்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் உள்ள மார்கெட்டில் பணிபுரிந்து வந்த சாஜில், கடந்த 2020, ஜன 20ஆம் தேதி தான் வேலை செய்யும் இடத்திற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது வேன் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த சாஜில், சுமார் 6 மாத சிகிச்சைக்கு பிறகு பணிக்கு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு விபத்து இழப்பீடாக வட்டியுடன் ரூ. 1,03,38,503 வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், கேரளத்தை சேர்ந்த முகமது கடந்த 2020 மார்ச் 31ஆம் தேதி நண்பருடன் பணிபுரியும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவர்மீது வாகனம் மோதியுள்ளது. இதில், தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயமடைந்த முகமது நாடு திரும்பினார்.
இந்நிலையில், இடது கண் பார்வையை இழந்த முகமதுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 1,21,72,062 மற்றும் அதற்கான 9 சதவீத வட்டி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.