அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிகள் தங்களது வீட்டிற்குள் நுழைந்த கரடியை சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தி விரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ்வீக் பத்திரிக்கை கூறியிருப்பதாவது, இந்தத் தம்பதி வீட்டிற்கு வெளியே கரடியைக் கண்டுள்ளனர். பறவைகளுக்கு வைத்திருந்த இரையினை அந்தக் கரடி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனையடுத்து, வீட்டின் ஜன்னலைத் திறந்து அந்தத் தம்பதி கரடியை விரட்ட முயன்றனர். இருப்பினும், அவர்களைத் திருப்பி தாக்க முயன்ற கரடி ஜன்னலினை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தது.
கரடியுடனான இந்தப் போராட்டத்தின் போது கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். பின்னர், சமையலறைக் கத்தியினைப் பயன்படுத்தி அந்தக் கரடியை குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது இந்த தம்பதியின் குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த இந்தத் தம்பதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது ஒரு பெண் கரடியாகும். அதற்கு ஒரு ஆண் கரடிக்குட்டியும் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1989ஆம் ஆண்டு 9,000 ஆக இருந்த கரடிகளின் எண்ணிக்கை தற்போது அந்த எண்ணிக்கை 24,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் புளோரிடாவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.