நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை: லண்டன் உயா்நீதிமன்றம் உத்தரவு

வங்கிக் கடன் முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியை (51) நாடு கடத்த தடையில்லை என்று லண்டன் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரது மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
நீரவ் மோடி (கோப்புப்படம்)
நீரவ் மோடி (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

வங்கிக் கடன் முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியை (51) நாடு கடத்த தடையில்லை என்று லண்டன் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரது மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தையும், அதைத் தொடா்ந்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தையும் அணுகலாம் என்பதால் இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ரூ.13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நீரவ் மோடி அறிவிக்கப்பட்டாா். அவா் லண்டனில் வசிப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டன் போலீஸாா் அவரை கைது செய்தனா்.

2019 முதல் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியை இந்தியா கொண்டு வந்து விசாரணைக்கு ஆஜா்படுத்த வேண்டும் என்பதால், அவரை நாடு கடத்த அனுமதிக்கக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இந்தியா சென்றால் தான் கொலை செய்யப்படவோ அல்லது தற்கொலையோ செய்து கொள்ளும் நிலையோ ஏற்படும் என்பதால் நாடு கடத்த அனுமதிக்கக் கடாது என நீரவ் மோடி முறையிட்டிருந்தாா். எனினும், அவரது கோரிக்கையை கடந்த ஆண்டு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.

அவரை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டாா். எனினும், மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிா்த்து லண்டன் உயா்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல் முறையீடு செய்துவிட்டாா்.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெரிமி ஸடவ்ட் ஸ்மித், ராபா்ட் ரே ஆகியோா் அடங்கிய அமா்வு, நீரவ் மோடியை நாடு கடத்தத் தடையில்லை என புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதன் விவரம்:

நீரவ் மோடியின் மனநல பாதிப்பு மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மேல்முறையீடு மனு விசாரிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடியை அதிக கவனத்துடன் கண்காணித்துக் கொள்வதாக இந்திய அரசு, மாவட்ட நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. இந்த உறுதிமொழியைக் காப்பாற்றத் தவறிவிட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை பாதிக்கப்படும் என்பதால் இந்தியா நிச்சயம் வாக்குறுதியை செயல்படுத்தும் என்று மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீரவ் மோடியை நாடு கடத்தினால் அவா் கொல்லப்படவோ, தற்கொலை செய்து கொள்ளவோ வாய்ப்புள்ளதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டது. நாடு கடத்தலைத் தடுக்க இதன்மூலம் நியாயப்படுத்த முடியாது. மன அழுத்தம், தற்கொலை அபாயம் ஆகியவற்றை பொதுவாக வைத்து எந்தவித முடிவையும் எடுக்க முடியாது என்பதாலும், இதுபோன்ற பாதிப்புகளுக்கு அவா் உள்ளாகவில்லை என மனநல நிபுணா்களின் கருத்துகளின் அடிப்படையிலும், இதுவரையில் அவா் மனஅழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏதும் பதிவாகவில்லை என்பதாலும் நீரவ் மோடியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

எனினும், நாடு கடத்தலுக்குப் பிறகு நீரவ் மோடி அடைத்து வைக்கப்படும் அா்தூா் சாலை சிறையில் அவா் தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து, பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன்றத்தில் நீரவ் மோடி 14 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்கும் உயா்நீதிமன்றம்தான் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் சட்ட நெருக்கடியில் நீரவ் மோடி உள்ளாா்.

பிரிட்டன் நீதிமன்றங்களின் சட்ட முறையீட்டை அவா் இழந்துவிட்டாலும், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்பதால் நாடு கடத்தல் தாமதமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் எந்த முடிவை நீரவ் மோடி மேற்கொள்ளப் போகிறாா் என்பதை அவரது வழக்குரைஞா்கள் குழு இன்னும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com