சீனாவில் முதியவர் ஒருவர் புகைப்பிடித்தபடியே மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு போட்டியை நிறைவு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விளையாட்டு வீரர்கள் எந்தவித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பது எழுதப்படாத விதி. அதனை மாற்றியமைக்கும் வகையில் புகைப்பிடித்தபடியே 50 வயது முதியவர் ஒருவர் 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓடி சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் பலராலும் அறியப்படுபவர் அங்கிள் சென். 50 வயதான இவர், சீனாவின் ஜியாண்ட் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.
மொத்தம் 1500 வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், புகைப்பிடித்தபடியே அங்கிள் சென் கலந்துகொண்டது பேசுபொருளானது.
எனினும் அவர் பந்தய தூரமான 42 கிலோமீட்டரை 3 மணிநேரம் 28 நிமிடங்கள் 45 நொடிகளில் எட்டியதால், அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அங்கிள் சென்-னுக்கு இது முதல் போட்டியல்ல. இவர் இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு பந்தய தூரத்தை நிறைவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் கலந்துகொண்டு போட்டியை நிறைவு செய்துள்ளார். அப்போதும் அவர் புகைப்பிடித்தபடியே போட்டியில் கலந்துகொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்பழக்கம் விளையாட்டு வீரர்களின் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும், அங்கிள் சென், அதனை மாற்றியமைத்துள்ளார் என சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.