ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய மதச் சட்டத்தின்படி ஈரானில் பெண்கள், பெண் குழந்தைகள் ஹிஜாப் அணிவது கட்டாயம். இந்லையில் தெஹ்ரான் நகரில் பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என்று போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். இதன் பிறகு அங்கு போராட்டம் வலுத்து வருகிறது.
ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாபை கழற்றி வீசியும், ஹிஜாபை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினர் - போராட்டக்கார்கள் இடையே நடந்த தாக்குதலில் 180க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இதில் 19 பேர் குழந்தைகள் என ஈரான் மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளை போலீசார் கைது செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதேநேரத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.