இலங்கையில் ஆளும் அரசைக் கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் கடந்த சில நாள்களாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, அத்தியாவசிய பொருள்களில் விலையும் உச்சத்தை அடைந்து வருவதால் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்சவிற்கும் எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக, இலங்கையில் 13 மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மக்கள் அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு போராட்டம் நடத்தினா்.
நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச, விளையாட்டுத் துறை அமைச்சர் நமல் ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இலங்கை அரசைக் கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க கூட்டணிக் கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.